சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று  கோவை, திருப்பூர் பகுதிகளில் ஆய்வு நடத்திவிட்டு சென்னை திரும்பிய நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உளளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (31/05/2021) காலை 11.00 மணிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மேலும் கடுமையானக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா, தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா, தளர்வுகளற்ற ஊரடங்கில் சில தளர்வுகளை அளிக்கலாமா என்பது குறித்து  ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.