டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும், விமானிகள், விமான சிப்பந்திகள், அடுத்த 48 மணி நேரத்திற்கு விமானப் பயணம் மேற்கொள்ள தடை விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு ஒவ்வொரு முறை தடுப்பூசி செலுத்தும் போதும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விமானிகள், ‘கேபின்’ குழுவினர் மற்றும் விமான சிப்பந்திகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அடுத்த 48 மணி நேரம் விமானங்களில் பறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, டி.ஜி.சி.ஏ. எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  விமானிகள் மற்றும் விமான ‘கேபின்’ குழுவினர் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஊசி போட்ட 30 நிமிடங்கள் வரை எதிர்விளைவுகள் ஏதும் உள்ளதா என அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். அதேபோல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் அடுத்த 48 மணி நேரத்திற்கு விமானத்தில் பறக்க மருத்துவ ரீதியாக தகுதியில்லாதவர்கள் என கருதப்படுவர்.

எனவே அவர்கள் விமானத்தில் பறக்க அனுமதி இல்லை.அதன் பிறகு பணிக்கு வரும் அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்கு டாக்டர்களிடம் அனுப்பி வைக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]