சென்னை

பிரபல திரைப்பட இயக்குநர் செல்வராகவன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்

கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில் முதல் கட்டமாக நாட்டின் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், கொரொனா முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு இலவசமாக கொரோனா ஊசி போடப்பட்டது.  அதன்பிறகு மார்ச் 1 முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

இந்த இரண்டாம் கட்டத்தில் 60 வயதைக் கடந்தோருக்கும் 45 வயதைக் கடந்து இணை நோய்கள் உள்ளோருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  இம்முறை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்துடனும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இம்முறை பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.   தமிழகத்தில் கமலஹாசன், குஷ்பு, ராதிகா உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகர் தனுஷ் சின் சகோதரருமான செல்வராகவன் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பூசி பொட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தகவலை அவருடைய மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.   தற்போது செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை தொடர்ந்து அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.