டெல்லி: டெல்லி காவல்துறையினர் சாலைகளில் ஆணிகள் மற்றும் முள் வேலிகள் அமைத்துள்ள நிலையில், அதே சாலைகளில் விவசாயிகள் பூச்செடிகளை நட்டு ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில் சிங்கு எல்லையில் கடந்த குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியால் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறையினர் காங்கிரீட் தடுப்புகள், முள்வேலிகள் மற்றும் தரைகளில் ஆணிகள் ஆகியவற்றை பதித்து, போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக காவல்துறையினர் செய்துள்ள முள்வேலி பாதுகாப்புக்கும் சாலையில் பதித்துள்ள அணிகளுக்கும் விவசாயிகள் அமைதியான வழியில் பதிலடி தந்துள்ளனர்.

காசிப்பூர் எல்லையில் அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து பூச்செடிகளை நட்டு வருகின்றனர். இது குறித்து விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் திகைத் கூறியதாவது: போலீசார் எங்களுக்காக ஆணிகளை சாலையில் பதித்துள்ளனர். ஆனால்  நாங்கள் அவர்களுக்காக பூக்களை நட திட்டமிட்டுள்ளோம். இதை நடுவது எங்களுக்கு நடுவது சிரமமான வேலை கிடையாது என்று தெரிவித்து உள்ளார்.