சண்டிகர்: குர்தாஸ்பூர் எம்பி சன்னி தியோலை புறக்கணிக்க வேண்டும் என்று பஞ்சாப்  விவசாயிகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

குர்தாஸ்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சன்னி தியோல் விவசாயத் துறை மசோதாக்களுக்கு ஆதரவாக முன்வந்ததை அடுத்து பஞ்சாபில் விவசாயிகள் இந்த போராட்டத்தை அறிவித்தனர். மான்சா மாவட்டத்தில் அமைந்துள்ள புத்லாதா மண்டி கமிஷன் முகவர்களும் பாஜக தலைவர்களை உள்ளே நுழைய விடமாட்டோம் என்று அறிவித்துள்ள அதே வேளையில், அனைத்து பாஜக தலைவர்களையும் தொழிலாளர்களையும் புறக்கணிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தியோல், ஒரு விவசாயியின் மகனாக இருந்த போதிலும் பஞ்சாப் சமூகத்தை காட்டிக் கொடுத்தார் என்று விவசாயிகள் தெரிவித்தனர். பஞ்சாப் அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவா, இந்தி திரைப்படத்தில் தியோலின் புகழ்பெற்ற உரையாடலை மேற்கோள் காட்டி, விவசாயிகளை ஏமாற்றிவிட்டார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாரதிய கிசான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரிந்தர் சிங் கூறுகையில், தியோலின் ஆதரவு குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். 2019 தேர்தலில் போட்டியிட வந்தபோது பஞ்சாபிலிருந்து எவ்வளவு அன்பு பெற்றார் என்பதை அவர் மறந்துவிட்டார்.

அந்த பிராந்தியத்தில் பாஜகவுக்கு ஆதரவாக எந்த அலையும் இல்லை, ஆனால் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். இருப்பினும், அவர் தனது வாக்காளர்களை மறந்துவிட்டதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், வேதனையடைந்துள்ளனர் என்று கூறி உள்ளார்.