பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து விநாடிக்கு 77000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கே ஆர் எஸ் அணை முழுவதுமாக நிறம்பி உள்ளது. இதனால் கே ஆர் எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,281.89 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 396 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இரவில் அது குறைந்து வினாடிக்கு 29 ஆயிரத்து 855 கனஅடியாக இருந்தது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சரகூரு தாலுகா நுகு கிராமத்தில் நுகு அணை அமைந்துள்ளது. இந்த அணையும் நிரம்பியதால் அங்கிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் கபிலாவில் திறக்கப்பட்டுள்ளது.

கபினி, நுகு அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டு ஓடி, டி.நரசிப்புரா அருகே திருமா கூடலுவில் காவிரியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்ட நிலையில், நேற்று அது அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 77 ஆயிரத்து 162 கனஅடி நீர் செல்கிறது.

இந்த 3 அணைகளில் இருந்தும் திறக்கப்பட்ட தண்ணீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளம் சூழ்ந்து 92 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  சுற்றுலா பயணிகள் காவிரி கரையோர பகுதிகளில்உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.