மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து நேற்று சோதனை நடத்தப்பட்டது.

இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத குடியேறிகள் இருப்பது குறித்து குடிநுழைவுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

4 மாடிகளைக் கொண்ட 6 தொகுதிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மொத்தம் 895 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 506 பேர் பல்வேறு குடிநுழைவு விதிமீறல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர், அதில் 58 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வங்காளதேசம், நேபாள், இந்தோனேசிய, இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது அதிகாரிகளைக் கண்டதும் அந்த குடியிருப்பு வளாகத்தின் மேற்கூரைகளில் பலர் தஞ்சமடைந்ததாகவும், சிலர் சுவர் ஏறி குதித்து தப்பியோடியதாகவும் அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிலர் அருகில் உள்ள வணிக வளாகங்களில் புகுந்துகொண்டு வாடிக்கையாளர்கள் போல் தங்களை காட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.