சிவகங்கை:  போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட  திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் உடலில் 44 இடங்களில்  காயங்கள் இருப்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிய வந்த நிலையில், இதுகுறித்து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக விசாரணையை  நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்  இன்று தனது விசாரணையை தொடங்கி உள்ளார்.  முதற்கட்டமாக இந்த வழக்கு தொடர்புடைய 25 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் இன்று காலை திருபுவனம் காவல்நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்கு தொடர்பாக அங்கிருந்த காவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது27). இவர் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 3 மாதங்களாக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு வந்த பெண் ஒருவரின் காரில் இருந்த 10 பவுன் நகை மாயமானது. இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அஜித்குமாரை விசாரித்தனர். மேலும் அவரது சகோதரர் நவீன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரையும் திருப்புவனம் போலீசார் விடிய, விடிய விசாரித்தனர்.

இந்த நிலையில் விசாரணையின்போது அஜித்குமாரை போலீசார் தடியால் சரமாரியாக தாக்கினர். மேலும் மிளகாய்பொடி தூவியும் கொடூரமாக தாக்கிய நிலையில் அஜித்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  அஜித்குமாரை போலீசார் அடித்துக்கொலை செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இந்த விவகாரம் இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் டிரெங்கினாது. மேலும் அஜித்குமாரை காவலர்கள் கொடூரமாக தாக்கும் வீடியோவும் வெளியானது.

இதையடுத்து வேறு வழியின்றி காவல்துறையினர்,  மடப்புரம் போலீசார் ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு, ஆனந்த், கண்ணன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம், சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் சென்னையில் இருந்து யாரோ முக்கிய பிரமுகர் உத்தரவின் பெயரிலேயே போலீசார் அஜித்குமாரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளது மருத்துவ பரிசோதனையிலும் தெரிய வந்துள்ளது.  முகம், காது உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் பொடியை தூவி சித்ரவதை செய்த போலீசார் தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் எந்த பாகங்களையும் விட்டு வைக்காமல் காயம் ஏற்படும் வகையில் கம்பியில் கட்டி வைத்து இரும்பு ராடுகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். சுமார் 44 இடங்களில் அவர்மீது தாக்குதல் நடத்தியிருப்பதும் உடற்கூறாய்வு மூலம் வெளியானது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, காவல்துறையை கடுமையாக விமர்சித்ததுடன், யாரையோ காப்பாற்ற முயற்சி செய்கிறது என நேரடியாக குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் மேலும் உண்மை நிலவரத்தை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைப்ப தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அஜித்குமார் மரணம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் திருப்புவனம் அண்ணாநகரை சேர்ந்த கார்த்திக் ராஜா வழக்கு தாக்கல் செய்தார். மேலும் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் மாரீஸ்குமார் உள்ளிட்ட 5 பேரும் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரியகிளாட் அமர்வில்  விசாரிக்கப்பட்டது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சிறப்பு படையிடம் ஒப்படைத்தது யார்? காவலாளி அஜித்குமாரை 2 நாட்கள் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியது ஏன்? பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே மக்களை தாக்கலாமா? சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக தான் என்பதை போலீசார் ஏன் கருத்தில் கொள்ளவில்லை? மேலும் இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் வருத்தம் அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது.

சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைக்கு எதிரானது. திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையையும், மடப்புரம் கோவில் செயல் அலுவலர் வீடியோ பதிவையும் மதுரை அரசு மருத்துவமனை டீன் சமர்ப்பித்துள்ள அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் உடனடியாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவமனை டீன் அருள் சுந்த ரேஷ்குமார் தாக்கல் செய்தார். அதை படித்து பார்த்த நீதிபதிகள் உடலில் ஒரு இடம் கூட விடாமல் அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவி வெறித்தனமாக தாக்கியுள்ளனர். ஒருவரை கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். இதனை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பதாகவே போலீசார் இப்படி ஒருவரை தாக்கலாமா? இந்த சம்பவத்தை இயக்க உத்தரவிட்டது யார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். மேலும் அஜித்குமார் கொலை சிறப்பு படை போலீசார் திட்டமிட்டு செய்ததாகும். ஒரு அரசு தனது குடிமகனை கொலை செய்துள்ளது. இதனை சாதாரண கொலை வழக்கு போல இல்லாமல் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

எனவே இந்த வழக்கு விசாரணை மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் அஜித்குமார் மரண வழக்கை உடனடியாக விசாரிக்க தொடங்க வேண்டும். இது தொடர்பாக ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிவகங்கை மாவட்ட போலீசார் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். விசாரணை நடத்திய அறிக்கையை மாவட்ட நீதிபதி வருகிற 8-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

இந்தநிலையில், இன்று காலை அஜித்குமார் கொல்லப்பட்டது  தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிவகங்கை மாவட்ட போலீசிடம் இருந்து இன்று காலை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்தமாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக அஜித் மார் மரணம் தொடர்பான விசாரணையை இன்று தொடங்கியுள்ளார்.   இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை தொடங்கினார். அப்போது அஜித்குமார் தாக்கப்பட்ட போலீஸ் நிலையம் மற்றும் கோவில் வளாக பகுதிகள் ஆகியவற்றையும் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதுதொடர்பாக கோவில் ஊழியர்கள் அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் திருப்புவனம் போலீசார் உள்ளிட்ட 25 பேரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். வருகிற 8-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி தாக்கல் செய்யும் அறிக்கையில், காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்டதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்த முக்கிய புள்ளிகள் குறித்த விபரமும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.