நெய்வேலி

நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் அங்குக் கலவரம் வெடித்துள்ளது.

பாமகவினர் என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அங்கு இதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அதில் பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்பகுதி போர்க்களமாகக் காட்சியளித்தது.

காவல்துறையினர் இந்த கலவரத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்தனர். சில காவல்துறையினர் பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காயம் அடைந்தனர். போராட்டம் தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாமகவினர் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால், நெய்வேலி செல்ல உள்ளார்.

கலவரம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால்,

”சுமார் 25 நிமிடம் நடைபெற்ற போராட்டம் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 500- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள், காவல்துறை வாகனங்களைத் தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.