சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் ஓஜி கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்த 4 பேரை போதைப் பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர்.  விசாரணையில் அவர்கள் 4 பேரும் நல்ல பணியில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. ஒருவர் யுடியூப் சேனல் நடத்தி வருவதும், மற்றொருவர் சாப்ட்வர் பொறியாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு, சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல்குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல்குழுவினர் மற்றும் சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, சூளைமேடு, கமலா நேரு நகர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 நபர்களை பிடித்து விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்தபோது, ஓஜி கஞ்சா, கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதைப்பொருள்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் சூளைமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போதைப்பொருள் வைத்திருந்த பிரதாப், ஜனார்த்தனன், பூர்ணசந்திரன், அப்துல் வாசிம் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 260 கிராம் ஒஜி கஞ்சா, 10 மில்லி கஞ்சா ஆயில், 1.5 கிலோ கஞ்சா, 8 எம்டிஎம்ஏ மாத்திரைகள், பணம் ரூ.2.65 லட்சம், 6 செல்போன்கள், 5 எடை மெஷின்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் பிரதாப் யூடியூப் சேனல் நடத்தி வருவதும், ஜனார்த்தனன் பெங்களூரில் தனியார் மென்பெருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், பூர்ணசந்திரன் கல்லூரியில் பிபிஏ படித்து வருவதும், அப்துல் வாசிம் தனியார் ரெஸ்டாரன்டில் மேலாளராக உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.