பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வேட்டுபாளையத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மல்லிகா தம்பதியினரின் 2வது மகள் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதால், அதிர்ச்சி அடைந்த சின்னசாமியின் மனைவி மற்றும் மகள், பேத்தி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான விசாரணையில், சின்னசாமி மல்லிகா தம்பதியினருக்கு அமுதா, பூவிழி என இரு மகள்கள் உள்ளனர். அமுதாவுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், பூவிழிக்கு இன்னமும் திருமணம் நடைபெறவில்லை. இந்த நிலையில், சின்னசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இயற்கை எய்தினார். இதைனால் சோகத்துடன் காணப்பட்ட அந்த குடும்பத்தில் மேலும் ஒரு சோகமான நிகழ்வாக, அமுதா, தனது கணவருடன் சண்டையிட்டு தனது மகள் தனன்யாவுடன் பிரிந்து வந்தார். வீட்டில் மல்லிகா, அமுதா, தனன்யா மற்றும் பூவிழி ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், மல்லிகாவின் 2-வது மகள் பூவிழி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் காதல் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மல்லிகா, அவரது மகள் அமுதா மற்றும் தனன்யா ஆகியோர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்த நிலையில், இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி உள்ளனர். உள்ளேயிருந்து பதில் வராததால், கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் மல்லிகா தனியாகவும், மற்றொரு அறையில் அமுதா மற்றும் தனன்யா இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]