ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், முற்பகல் 11மணி  நிலவரப்படி, 24-10 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இன்று 2வது கட்ட தேர்தல்  நடைபெற்று வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள  26 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 239 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று  (செப்.25) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. , இத்தொகுதிகளில் 25.78 லட்சம் பேர் வாக்காளிக்க தகுதிபெற்றுள்ளனர். இந்த தோ்தலுக்காக, 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் களம் காணும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மத்திய காஷ்மீரில் உள்ள இரண்டு தொகுதிகளில் போட்டி யிடுகிறார். மூன்று தலைமுறைகளாக அப்துல்லாவின் குடும்பத்தார் வாகைசூடிய கந்தர்பால் தொகுதி அதில் ஒன்றாகும்.

மற்றொரு தொகுதியான புட்காமில் மக்கள் ஜனநாயக கட்சியின் சையத் முன்தஜீர் மெஹ்தி, அவாமி தேசிய மாநாட்டுக் கட்சியின் அகா சையத் அகமது மூஸ்வி ஆகியோரை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.

காஷ்மீரில் இன்று நடைபெறும் தேர்தலை ஒட்டி ஸ்ரீநகர், புட்காம் தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை 16 வெளிநாட்டு அமைப்புகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகள் கண்காணிக்க வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இந்த தூதர்கள் குழுவில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கியமான பங்களிப்பைச் செலுத்தும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். முதல்முறை வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தீவிரவாதம் அற்ற வளர்ந்த ஜம்மு-காஷ்மீர் உருவாக மக்கள் பெருமளவில் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுகிறேன்” என அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,  “ஜம்மு-காஷ்மீர் சகோதர சகோதரிகளே, இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, அதிக எண்ணிக்கையில் வந்து உங்கள் உரிமைகள், மற்றும் செழிப்புக்காக வாக்களியுங்கள் – ‘இண்டியா’வுக்கு வாக்களியுங்கள். நீங்கள் இண்டியாவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட இந்த அநீதியின் பிரமை உடைத்து ஜம்மு காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு செல்லும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா “இளம் வாக்காளர்களுக்கு வாழ்த்துகள். இன்று நீங்கள் செய்யும் ஜனநாயகக் கடமை காஷ்மீரில் சேவை, நல்நிர்வாகம், வளர்ச்சியை உறுதி செய்யும். ஊழலை ஒழிக்கும், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அரசின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜம்மு காஷ்மீரின் தங்கமான எதிர்காலத்துக்கு வித்திடும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் நேற்று முன்தினத்துடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான உமா் அப்துல்லா கந்தா்பால் மற்றும் பத்காம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.