சியோல்

தென்கொரிய வெப்ப அலையால் 21 பேர் மரணமடைந்துள்ளனர்.

தற்போது தென் கொரியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.  இங்கு அடிக்கும் வெப்ப அலையால்  கிட்டத்தட்ட 2,300 பேர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் வெப்பம் கொளுத்தும் நிலையில், மே 20 முதல் ஆகஸ்ட் 11 வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் நேற்று இறந்துள்ளார்.

கடந்த மே 20 முதல் ஆகஸ்ட் 11க்கு இடையில் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்ற மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 2,139 ஆக இருந்தது.

இந்த வெப்ப அலையால் கால்நடைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வெப்ப அலையால் இதுவரை 6,58,000 கோழிகள் உள்பட 7,03,000 கால் நடைகளும், 8,95,000 வளர்ப்பு மீன்களும் இறந்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை தொடரும் என்றும், இரவு நேரங்களில் மேற்குப் பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது.