நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் ஒரு விசைப் படகுடன்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், மீனவர்கள் நெடுந்தீவு அருகே நேற்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்கள் 11 பேரையும் கைது செய்தனர். மேலும், விசைப்படகையும் பறிமுதல் செய்தனார்.

 தமிழக மீனவர்கள்,  எல்லை தாண்டி வந்து, இலங்கை பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது, நாகை மீனவர்களை கைது செய்ததாக, அந்நாட்டு கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவா்கள் 11 பேரும் காங்கேசன்துறைக்கு நேற்று நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று காலை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.