சென்னை

நேற்று திருத்தணியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், பீரகுப்பம் மதுரா கே.ஜி.கண்டிகை கிராமத்தில் திருத்தணியில் இருந்து சோளிங்கர் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியும், ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் (வயது 60) த/பெ. சுப்பிரமணி, சிவானந்தம் (வயது 53) த/பெ.சண்முகம், மகேஷ் (வயது 40) த/பெ.கண்ணியப்பன் மற்றும் முரளி (வயது 38) த/பெ.பெரியசாமி ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 28 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”.

என அறிவிக்கப்பட்டுள்ளது.