
டெல்லி:
போதையில் அடித்து துன்புறுத்திய குடிகார கணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்றதாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், மிட்னாப்பூர், தஸ்பூர் போலீஸ் சரகம், கஷியாரா கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசங்கர் தலுவி. இவர் டெல்லியில் சமையல் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில சொந்த கிராமத்துக்குச் சென்றார். அங்கு தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வார். வீட்டுக்குச் சென்றவுடன் போதையில் மனைவி பீனாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
தினமும் இந்த கொடுமையை அனுபவித்த பீனா நேற்று அடி தாங்க முடியாமல் விபரீத முடிவை எடுத்தார். போதையில் இருந்த கணவரை வீட்டின் அருகே இருந்த ஒரு மா மரத்தில் தனது புடவையை கொண்டு கட்டினார். பின்னர் மூங்கில் பிரம்பால் அவரை சராமரியாக அடித்தார். இதில் அவர் இறந்துவிட்டார்.
இது குறித்து அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் கூறுகையில்,‘‘ மணிசங்கர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பார். ஒரே அலறல் சத்தமாக தான் இருக்கும். நேற்றும் அதுபோல தான் சத்தம் கேட்டது. நேற்று சரஸ்வதி பூஜைக்கு பீனா ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிவதற்குள்ளேயை அவர்களுக்குள் சண்டை தொடங்கிவிட்டது. கணவரை கட்டி வைத்த அவர் அதற்குமேல் என்ன நடந்தது என சொல்ல மறுத்துவிட்டார்’’ என்றனர்.
அக்கம்பக்கம் வீட்டாருடன் பீனா குடும்பத்தாருக்கு சுமூக உறவு இல்லாதது தெரியவந்துள்ளது. இது குறித்து மணிசங்கர் சகோதரர் பிரசாந்த் தலுவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பீனாவை கைது செய்தனர். பீனா அடித்ததால் மணிசங்கர் இறந்தாரா? அல்லது ஓவர் குடியால் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பீனா துணி துவைத்து அதன் மூலம் வரும் குறைந்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel