சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடிவிட்டு,  கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி  சென்னையில் வியாபாரிகள் சங்க பேரவை சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் அதிகரித்து வரும் நிலையில், கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே ஈரோடு, திருப்பூர் பகுதியில் கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி அவ்வப்போது போராட்டங் நடைபெற்று வந்த நிலையில், சமீப காலமாக அரசியல் கட்சிகளும் கள்ளுக்கடை திறக்க ஆதரவு அளித்து வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகி வருவதை தடுக்கும் வகையில் உடல்நலத்திற்கு பாதுகாப்பான கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,    தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டும். கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். பூரண மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.பொன்னுசாமி தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வியாபாரிகள் சங்க  மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் குமார், “ தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் பூரண மதுவிலக்கு கோரி வருகின்றனர். இநத்  பூரண மதுவிலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் எதற்காக கள்ளுக்கடைகளை திறக்கக் கோருகிறோம் என்பது குறித்து கேள்வி வரும்.

இந்த தகவலை இதை நான் சொல்லவில்லை. அமைச்சர் முத்துசாமி சொல்லியிருக்கிறார். மதுப்பிரியர்கள் குடியை நிறுத்திவிட்டால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் பூரண மது விலக்கை அமல்படுத்தவில்லை எனக் கூறியிருக்கிறார்.

அதேபோல  திமுக எம்.பி. கனிமொழியும், “திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம்” என்று சொல்லி இருந்தார். ஆனால், அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சமீபத்தில் கள்ளகுறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இன்னும்  மாநிலத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும்  கள்ளச் சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தவறுகளை மறைக்க ரூ.10 லட்சம் இழப்பீடு. யாருடைய வரிப் பணத்தில் இதைச் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர், தமிழ்நாடு விரைவில் குடிகார மாநிலமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தவர்,  பூரண மதுவிலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் மதுப் பிரியர்களால் உடனடியாக குடியை நிறுத்த முடியாது. அதற்கு சில கால அவகாசம் தேவை. இதையொட்டியே கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கெனவே கள்ளுக்கடைகளை திறக்க முற்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த முறை குண்டுகளை நெஞ்சில் வாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்” என கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஹரி நாடார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.