சென்னை: கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கலைஞா் எழுதுகோல்’ விருதுக்கு (2024)விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  தகுதிவாய்ந்த மூத்த பத்திரிகையாளா்கள் ஏப். 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க லாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞா் எழுதுகோல் விருது வழங்கி கெளரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் அடங்கும். விருதுக்கான தகுதிகள் விவரம்: விண்ணப்பதாரா் தமிழகத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் தொடா்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.  விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் நேரடியாகவோ, மற்றொருவா் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பதாரா்களில் ஒருவரே விருதாளராக, அரசால் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவாா். குழுவின் முடிவே இறுதியானது.

மேற்காணும் தகுதிகளை கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநா், செய்தி மக்கள் தொடா்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு ஏப்.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.