பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஐஃபோன் உற்பத்தித் தொழிற்சாலை, தொழிலாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரச்சினையை ஒப்புக்கொண்டுள்ள விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோன் நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ஐபோன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை தைவான் நாட்டைச் சார்ந்த விஸ்ட்ரான் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும், தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.

இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள், மூலம் சம்பளம் தரக்கோரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், நிர்வாகம் ஒப்புக்கொள்ளாத நிலையில், தொழிலாளர்கள், தொழிற்சாலையை அடித்து நொறுக்கினர். இதனால், விஸ்ட்ரான் தொழிற்சாலையில் இருந்த, கணினிகள், வாகனங்கள், நிறுவனத்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டது.
இந்த வன்முறையினால், 437 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வன்முறையின் போது ஆயிரக்கணக்கான ஐஃபோன்கள் திருடப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த தொழிற்சாலைக்கு, விஸ்ட்ரான் நிறுவனம், கான்ட்ராக்டர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு எடுத்துள்ளது. அந்த தொழிற்சாலை, கான்ட்ராக்டர்களிடம் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய சம்பளத்தைத் தந்து விட்டதாகவும், கான்ட்ராக்டர்கள் சம்பளத்தைத் தொழிலாளர்களுக்கு கொடுக்க தாமதப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சுமார் ஒரு வாரகாலத்திற்கு பிறகு, கோலார் ஐபோன் ஆலையில் ஏற்பட்ட குறைபாடுகளை விஸ்ட்ரான் நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து விஸ்ட்ரான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் சம்பள விவகாரத்திற்காக மன்னிப்பு கோரியதுடன், ஐபோன் நிறுவனத்தின், இந்திய கிளையின் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.
நிறுவனம் மீது ந டத்தப்பட்ட தாக்குதல் நிகழ்வு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சில தொழிலாளர்களுக்கு சரியாக அல்லது சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதற்காக “நாங்கள் இதை மிகவும் வருந்துகிறோம், எங்கள் தொழிலாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறோம்” என்று கூறியுள்ளது.
நிறுவனத்தில், புதிய வசதியை விரிவுபடுத்தியதில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் முகவர் மற்றும் கொடுப்பனவுகளை நிர்வகிக்க அது முன்வைத்த சில செயல்முறைகள் பலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதாகவும், இந்த தவறுகளுக்காக, விஸ்ட்ரான் இன்ஃபோகாம் உற்பத்தி இந்தியாவின் துணைத் தலைவர் (புதுமை வணிகக் குழு) வின்சென்ட் லீ நீக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
மீண்டும் இதுபோன்ற சிக்கல்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்காக செயல்முறைகளை மேம்படுத்துவதோடு அதன் குழுக்களை மறுசீரமைப்பதாகவும், அதற்காக கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில், 24 மணிநேர குறை தீர்க்கும் ஹாட்லைனையும் அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக முழு இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை, அதை அடைய நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்த வசதியில் உள்ள தொழிலாளர்களுக்காக ஒரு பணியாளர் உதவித் திட்டத்தை நாங்கள் நிறுவியுள்ளோம் …
எங்கள் வணிகத்திற்கும் இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கும் நாங்கள் ஆழ்ந்த கடமைப்பட்டுள்ளோம். இது மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் சரியான நடவடிக்கைகளில் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம், ”என்று விஸ்ட்ரான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மத்திய தொழிலாளர் துறைக்கு அறிக்கையை சமர்ப்பித்த ஒரு நாள் கழித்து விஸ்ட்ரோனின் அறிக்கை வந்துள்ளது, தொழிலாளர் துறையின் அறிக்கையில், ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்யும் அமைப்பில் ஒரு குறைபாடு இருப்பதாகவும், 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு புதிய அமைப்புகளை நிறுவிய பின்னர் விஸ்ட்ரான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு நாளைக்கு எட்டு முதல் 12 மணி நேரம் வரை வேலை நேரம் அதிகரிப்பதன் காரணமாகவும், வருகை முறையின் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு வந்தாலும் அவர்களின் ஊதியங்கள் குறைக்கப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. சரியான முறையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததன் காரணமாகவே வன்முறை நிகழ்வுகள் ஏற்பட்டது என்றும் தெரிவித்து உள்ளது.
[youtube-feed feed=1]