சென்னை: தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை, சூரியசக்தி நிறுவு திறன் அதிகரித்துள்ளது, தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால், தினசரி மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். இதன் காரணமாக ஏற்கனவே நிலக்கரி மற்றும் நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், காற்றாலை, சோலார் பேனல் மூலம் மின்உற்பத்தியில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, காற்றாலை, சூரியசக்தி நிறுவு திறனை தமிழ்நாடு அரசு அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20-ல் இருந்து 2022-23 வரை பல பிரிவுகளிலும் நிறுவு திறன் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, காற்றாலை நிறுவு திறன் 55 மெகாவாட்டில் இருந்து 124 மெகாவாட்டாகவும், மேற்கூரை (சோலார் பேனல்) சூரியசக்தி திறன் 44 மெகாவாட்டில் இருந்து 101 மெகாவாட்டாக வும் அதிகரித்துள்ளது. 1,276 மெகாவாட்டாக இருந்த சூரியசக்தி நிறுவு திறன் 1,192 மெகாவாட்டாக உள்ளது.
கடந்த 2023-24-ம் ஆண்டில் மட்டும் 278 மெகாவாட் காற்றாலை, 1,281 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது
தமிழகம் முழுவதும் 2.5 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகளும், 40 லட்சம் வணிகப் பயன்பாட்டு மின் இணைப்புகளும், 25லட்சம் விவசாய மின்இணைப்புகளும் உள்ளன. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக மின்தேவை அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இதில் 4 ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. எஞ்சியவை மத்திய தொகுப்பில் இருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறது. இந்நிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால், வீடுகளில் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், இந்த வரும் நாட்களில் மின்தேவை அதிகரிக்கும். இதன்படி, இந்த ஆண்டு கோடையில் தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 22 ஆயிரத்து 150 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என தென்மண்டல மின்சார குழு கணித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.