சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது இதுதொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என்றும் அச்சம் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புக்கு ஆதரவு தந்த எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி. பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள எம்.பி.க்களை இணைத்து பிரதமரை சந்தித்து முறையிடப்படும் என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்றையக் கூட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மற்றும் இயற்கை வளங்கள் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு துறைஅமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்தப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழு நிகழ்வு குறித்து நன்றி தெரிவிக்கும் உரை நிகழ்த்தினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, , “2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ள இருக்க தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவை பாதிக்கப்படும் அபாயமும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களும் தண்டிக்கப்படக் கூடாது என்பதை சுட்டிக்காட்டி முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடித்து, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 14, 2025 அன்று ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
அடுத்தக்கட்டமாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கடந்த மார்ச் 5, 2025 அன்று கூட்டி, இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தென்னிந்திய மாநில அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை கடுமையாக எதிர்த்தும், தற்போது இருக்கும் தொகுதி வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும்,” என்று பேசினார்.
மேலும், அரசமைப்புச் சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்பட்சத்தில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியும், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கும், பாதிக்கப்படும் மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை மக்களுக்கு வெளிப்படுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் நேரில் பங்கேற்க, ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டார்.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு ‘நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்’; ‘1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்’; ‘மக்கள்தொகை கட்டுப்பாடுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது’; ‘உரிய அரசியல் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்’; ‘கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்’;
‘நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து பிரதமர் அவர்களுக்குக் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது’ என கூட்டாட்சி தத்துவம், ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக இந்த முன்னெடுப்பிற்கு துணை நின்ற தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு மக்களின் சார்பில் இப்பேரவையின் வாயிலாக என்னுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தினை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று நமது உரிமைகளை, நம் போல் பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமர் அவர்களைச் சந்திக்கவிருக்கிறோம் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்.
இவ்வாறு பேசினார்.