சேலம்: அதிமுகவில் பிளவை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சித்ததால் தான் அவரை பற்றி மட்டுமே பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
எஸ்.பி. வேலுமணி கட்சிக்குள் இருக்கும் பிரச்னையையே அண்ணன் தம்பி பிரச்னை என்று குறிப்பிட்டார். அந்த செய்தி தவறாக பரப்பப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள். சசிகலாவின் சொத்துகள் அரசுடமை ஆக்கப்படுவதற்கும், அரசுக்கும் தொடர்பில்லை.
நீதிமன்றங்களின் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பாமகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. இடஒதுக்கீடு அளிப்பது பற்றி சூழலுக்கேற்ப முடிவு எடுக்கப்படும். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா அரசு தொடரும்.
அதிமுக வேறு, அமமுக வேறு. அமமுக என்ன முயற்சித்தாலும் ஒன்றும் நடக்காது. அக்கட்சியிலிருந்து விலகி யாரேனும் அதிமுகவில் சேர விரும்பினால் கட்சி முடிவு செய்யும். அதிமுகவை பொறுத்தவரை திமுகதான் எதிரி கட்சி. தினகரன்தான் 18 எம்எல்ஏக்களை பிரித்து, கட்சியை உடைத்து ஆட்சியைக் கலைக்க முயற்சித்தார். அதன்பிறகு அமமுக கட்சியை தொடங்கினார்.
அதனால்தான் தினகரனை பற்றியே பேசுகிறோம். அதிமுகவில் எந்தப் பிரச்னையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் மீதான ஊழல் வழக்குகளை தனி நீதிமன்றம் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
ஸ்டாலின் அறியாமையில் பேசுகிறார். திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீதான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எதையும் சந்திக்கத் தயார் என்றார்.
[youtube-feed feed=1]