மதுரை: நீதிமன்ற உத்தரவின்படி, சிலை கடத்தலை விசாரித்த ஓய்வுபெற்ற ஐஜி  பொன்.மாணிக்கவேல் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்து சிபிஐ விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்த ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அனுமதி பெறாமல் வழக்குப் பதிவு செய்தது எப்படி? என சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, சிலை கடத்தல் தொடர்பாக,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன்.மாணிக்கவேலை உயர்நீதிமன்றம் நியமித்து, சிலை கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தி, சிலைகளை மீட்க உத்தரவிட்டது. அப்போது,  சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க உதவியது  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி காதர்பாஷா என்பவர் மீது பொன்மாணிக்க வேல் நடவடிக்கை எடுத்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொன்மாணிக்க வேல் ஒய்வு பெற்றார்.

இதையடுத்து திமுக அரசு, புதிய அதிகாரிகளை சிலை கடத்தல் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில்,  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி காதர்பாஷா என்பவர், பொன்.மாணிக்கவேல்  தன்மீது  வேண்டுமென்றே குற்றம் சுமத்தியதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு வழக்கறிஞரும் காதர் பாஷாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால்,    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான புகார் குறித்த முதல் கட்ட விசாரணை நடத்தி, புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவிட்டார்.

பொதுவாக சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காவல்துறையினரும், திமுக அரசும், இந்த விஷயத்தில் மவுனம் காத்தது சலசலப்பை எற்படுத்தியது. இதையடுத்து உயர்நீதி மன்ற உத்தரவின்படி,   சிபிஐ விசாரணை நடத்தி பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு பொன்.மாணிக்கவேல் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து சிபிஐ விசாரணை அறிக்கை நகல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு  நேற்று (புதன்கிழமை)  விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “சிலை கடத்தல் வழக்குகளை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்தார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். உரிய தகவல்கள் இல்லாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.

மேலும்,  போதுமான தகவல்கள் இல்லாமல் பொன்மாணிக்க வேல்மீது எப்ஐஆர் எப்படி பதிவு செய்யலாம்?. யார் மீது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் போதுமான தகவல்கள் இல்லாமல் இவ்வாறு சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியுமா? இதுவே இந்த வதுழக்கின்  விசாரணைக்கு தடை விதிக்க போதுமானது,” என்று கூறினார்.

இதையடுத்து  சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதோடு கடந்த விசாரணையின் போது மூடி முத்திரையிட்ட கவரில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் பொன் மாணிக்கவேல் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதற்கான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனையடுத்து நீதிபதி, சிபிஐ தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் காணொலி காட்சி வழியாக ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.