சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் மழை  வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  சென்னை என்ன ஆகுமோ?’ என அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக மதுரை நகர்பகுதியில் ஒரே இரவில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தல்லாகுளம், பெரியபட்டியில் 12 செ.மீ. மதுரை வடக்கில் 11 செ.மீ. பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக, மதுரை மணி நகரம் ரயில்வே கர்டர் பாலத்தில் 5 அடி உயரத்திற்கு வெள்ளம் போல நீர் பெருக்கெடுத்து ஓடியது. போலீஸ் வாகனம் ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. போலீசார் வெளியில் குதித்து நீந்தி தப்பினர்.  மதுரை மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

அதுபோல கோவையிலும் நேற்று இரவு கனமழை பெய்துள்ளது. இதில், ஆவாரம்பாளையம் பட்டாளத்தம்மன் கோயில் வீதியில் உள்ள பள்ளத்தில் இருந்து வெளியேறிய மழைநீர், அப்பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுபோல மழை வெள்ளத்தில் பேருந்து ஒன்று சிக்கியது.  இதனால் பயணிகளி அலறியதுடன், அருகே இருந்தவர்கள் வந்து பயணிகளை மீட்டனர். இது அம்மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழை  வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  சென்னை என்ன ஆகுமோ?’  என சந்தேகம் கிளப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (அக்14) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள்.

சனிக்கிழமை இரவு முதல் பெய்த கோவை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மழை பெய்தால் விரைவாக வடியும் வகையில் மழைநீர் வடிகால்களும், மழை நீரைக் கடத்திச் செல்லும் பாசனக் கால்வாய்களும் தூர்வாரப்படாதது தான் காரணம் ஆகும்.

மதுரை மாவட்டம் மேலூரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த இராமநத்தம் பகுதியில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் குமரேசன் என மொத்தம் 4 பேர் நேற்று ஒரே நாளில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ளனர்.

மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகச்சாதாரணமான பராமரிப்புப் பணிகளைக் கூட மேற்கொள்ளாமல் தமிழக அரசும், மின்சார வாரியமும் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கு மிகவும் வேதனையான எடுத்துக்காட்டு தான் இந்த உயிரிழப்புகள். இவை அனைத்துக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது தலைமைச் செயலாளர் என தமிழக அரசு நிர்வாகம் பல முறை பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடனும், பிற அதிகாரிகளுடனும் கலந்தாய்வுகளை நடத்தினார்கள். அவை அனைத்தும் பெயரளவிலான செயல்பாடுகளாகவே உள்ளன என்பதும், களத்தில் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதும் சில மணி நேரம் பெய்த லேசான மழையிலேயே அம்பலமாகியுள்ளது. இது தான் வட கிழக்கு பருவமழையை தமிழக அரசு எதிர்கொள்ளும் அழகு என்றால் அடுத்து வரும் நாட்களை எண்ணி அஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.

வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது. 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரம் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ளுமோ, சென்னை மாநகர மக்கள் எத்தகைய இன்னல்களையெல்லாம் எதிர்கொள்வார்களோ? என்ற அச்சமும், கவலையும் மனதை வாட்டுகின்றன.

சென்னை மாநகரில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.45-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு வரை முடிக்கப்படவில்லை. மழை – வெள்ளத்தை எதிர்கொள்ள படகுகள், நீர் இறைக்கும் கருவிகள் ஆகியவை மிகவும் அவசியம் தான் என்றாலும் கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு கூறியுள்ளார்.

4நாட்கள் கனமழை எச்சரிக்கை: சென்னை வெள்ளம் குறித்து அரசுக்கு அறப்போர் இயக்கம் சமர்ப்பித்த கள ஆய்வறிக்கை…