சென்னை: சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள, எடுக்கப்படுடள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததது. இது சென்னை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழைக்கான நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அக்.17 காலை முதல் அக்.22 நேற்று வரை சென்னையில் சராசரியாக 169.30 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதில் நேற்று மட்டும் சராசரியாக 4.66 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 0.30 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
மழையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக, நேற்று (அக்.22) 68 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 நபர்களுக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 நபர்களுக்கு மதிய உணவும், 15 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 நபர்களுக்கு இரவு உணவும் என மொத்தம் 3,96,400 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
தயார் நிலையில் படகுகள்
அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் மாநகராட்சிக்கு சொந்தமாக 36 படகுகள் வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 60 பேர், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சார்ந்த 30 பேர் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர்.
மழைநீர் தேங்கும் இடங்களில் அவற்றை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள், 150 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள், டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் உடனடியாக அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள் உட்பட மொத்தம் 478 வாகனங்களும், இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.
மழையில் கீழே விழும் மரங்கள்
மேலும் மழையில் கீழே விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை மழையின் காரணமாக 24 மரங்கள் விழுந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து சீராக உள்ளது.
வடி கால்வாய்கள் தூர்வாரும் பணிகள்
இதுவரை 1,132 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடி கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 44 கால்வாய்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 37 கால்வாய்களில் தடுப்புச் சுவர் உயர்த்தி கட்டுதல், அதன் மேல் கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓட்டேரி நல்லா கால்வாயில் 10.10 கிலோ மீட்டர் நீளத்திற்கும், விருகம்பாக்கம் கால்வாயில் 6 கிலோ மீட்டர் நிலத்திற்கும், கொடுங்கையூர் மற்றும் கேப்டன் கால்வாயில் தலா 3 கிலோமீட்டர் நீளத்திற்கும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வண்டல் மண் சேகரிப்புத் தொட்டிகள் தூர்வாரப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு மையத்தில் புகார் கொடுக்கலாம்
ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு (1913 என்ற உதவி எண்ணிற்கு) வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2,149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள், 45 கழிவுநீர் ஊர்திகள் என மொத்தம் 642 கழிவுநீர் அகற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.