கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 9-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

நாடு முழ்வதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே 21 நாட்களாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று நடைபெற்ற மேற்கு வங்க மாநிலத்தின் சிறப்பு சட்ட சபைக் கூட்டத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்தபோது முதல்வர் மம்தா பானர்ஜி,

”புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் மூலம் நீதியை பெறுகின்றனர். புகார்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க மசோதா வழி வகுக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை மனித குலத்திற்கு எதிரானவை. சமூக சீர்திருத்தங்கள் தேவை”

என்று கூறியுள்ளார்.