சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’ என கூறினார்.

இதைத்தொடர்ந்து, துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, பினராயி விஜயன் உள்பட பலர்  தங்களது கருத்துக்களை வலியுறுத்தினர்.

முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் பெயர்ப் பலகைகளில் தாய்மொழியில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.  ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ள அனைவரின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளிலும் அவர்களது பெயர் ஆங்கிலத்திலும், அவரவர் தாய்மொழியிலும் பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அ தேபோல் முதல்வர் ஸ்டாலினின் வரவேற்புரையை கூட்டத்தில் பங்கேற்றோர் அவரவர் தாய்மொழியில் கேட்கும் வகையிலும் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களுக்கு அரசு சார்பில்  முதல்வர் சால்வை அணிவித்து வரவேற்றதுடன்,. அவர்களுக்கு  வழங்கப்பட்ட பரிசு பெட்டகத்தில்,  புவிசார் குறியீடு பெற்ற தமிழகத்தின் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, பத்தமடை பாய், தோடர்கள் ஷால்வை, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஊட்டி வர்க்கி, ஈரோடு மஞ்சள் மற்று கொடைக்கானல் பூண்டு ஆகியன அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார். அதைத்தொடர்ந்து பேசியவர், தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 இடங்களை இழக்கும். எண்ணிக்கைதான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும்.

பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. அப்படியிருக்க மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது.

மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். காலம் காலமாக பாதுகாக்கப் படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும். அதனைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.

இவ்விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதனாலேயே முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் ஒன்றிணைந்துள்ளது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்துள்ளன. ஆனால் அந்த சாதனைக்காக கவுரவிக்கப்படாமல், அந்த மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளன.

பல பத்தாண்டுகளாகவே நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பல்வேறு கொள்கைகளை வகுத்து, அதை செயல்படுத்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தேசம் நிலையான மக்கள் தொகை பெருக்கத்தை இலக்காகக் கொண்ட போது அதற்கேற்ப நாம் மாநிலங்களில் மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்தோம். இன்னும் சில மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் அதைக் கட்டுப்படுத்தி ஒரு சாதனையை நாம் செய்துள்ளோம். அதற்காக இப்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் சூழலில் உள்ளோம்.” என்று பேசினார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், “ மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே இந்த தொகுதி மறுவரையறை. பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதை செயல்படுத்துகிறார்கள். கட்சி எல்லைகளைக் கடந்து நாம் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.

முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்த முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாள் இது. இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய ஒடிஷா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ,  “நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்; மக்கள் தொகையை நாம் கட்டுப்படுத்தியிருக்காவிட்டால் மிகவும் பெருகி வளர்ச்சி பாதித்திருக்கும்”  என தெரிவித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, தொகுதி மறுவரை என்பது  எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்;  இதை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்; மாநிலங்களோடு மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல்களை தொடங்கவேண்டும்”  என தெரிவித்தார்.