திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது.  இன்று 8வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில், நிலச்சரிவில் சேதமடைந்த வீடுகளில் உள்ள பொருட்கள் திருடுபோவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் கடந்த 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.  இதில் மலைமீது இருந்த பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை, அட்டமலை பகுதிகள் பெரும் சேதங்களை எதிர்கொண்டன.  நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவின்போது, வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பல ஆயிரம்  பேர் மண்ணோடு மண்ணாக கலந்தன.  மேலும்,  அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளிரிமலை கிராமங்களும் கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ளது- இந்த நிலச்சரிவு காரணமாக முக்கிய பாலம் உடைந்ததால், மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ராணுவம் தற்காலிக பாலம் அமைத்து மீட்புபணிகளை மேற்கொண்டு வருகிறது., நிலச்சரிவில் சிக்கியவர்கள் மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மோப்ப நாய் உதவுயுடன் ராணும் மற்றும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர் இன்று 8வது நாளாக தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

நேற்று 7-வது நாளாக  நடைபெற்ற மீட்பு பணிகளின்போது, நவீன கருவியான ரேடார் சிக்னல் அடிப்படையில் மண்ணில் புதைந்தவர்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உள்ளார்களா என தேடப்பட்டது. உடல்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள பகுதிகளில் நவீன கருவிகளுடன் தேடும் பணி நடந்தது. பாறைகள், மரங்களுக்கு அடியில் உடல்கள் புதையுண்டு உள்ளதா என தேடும் பணி நடைபெற்றது.

இதை  கேரள வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன், வனத்துறை மந்திரி சுசீந்திரன்  நேரில் பார்வையிட்டனர். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தபோது,   ‘நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களை தேடும் பணி கைவிடப்படவில்லை. காணாமல் போன கடைசி நபரை கண்டுபிடிக்கும் வரை மீட்பு பணிகள் தொடரும்’ என தெரிவித்தார்.

சூரல்மலை கிராமம் மற்றும் முண்டகை, அட்டமலை பகுதிகளை சேர்ந்த சுமார் 4,833 பேர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

இதற்கிடையில், மீட்பு பணிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலர்  ஈடுபட்டு வரும் நிலையில், நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்களும் எழுந்துள்ளன.  இதையடுத்து,  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு கடும்  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 1,500 பேர் மட்டுமே பெய்லி பாலத்தை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வயநாடு  நிலச்சரிவில் சிக்கி இதுவரை 402 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் 180 பேரை காணவில்லை. சாலியாற்றில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.  மேலும், நிலச்சரிவில் உயிரிழந்த அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத உடல்களை பொது மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டடுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.