இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் தாங்கள் இருக்கும் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பத்திரமாக இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஈரானில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் மீது தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

அதேவேளையில், லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரை ஒழிக்கும் நோக்கத்தோடு இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த பதற்றமான சூழலில் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

https://x.com/indemtel/status/1819361457386963443

டெல் அவிவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நடக்க வேண்டும். தேவையில்லாமல் நகரத்தை விட்டு மற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் நகரின் டெல் அவிவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் அங்குள்ள தூதரகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் தூதரக அதிகாரிகளை தொடர்புகொள்ள +972-547520711+972-543278392 என்ற 24×7 உதவி எண்களை அறிவித்துள்ளது.