டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட  வக்பு வாரிய திருத்த மசோதா  நாடாளுமன்றத்தில்  இன்று தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

வக்பு வாரிய திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வக்பு சட்டதிருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு, மசோதாவில் கொண்டுவரப்பட்ட 14 திருத்தங்களை வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, இறுதி வரைவு மசோதா மீது கடந்த 29ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் மசோதா ஏற்கப்பட்டதை அடுத்து, அதை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கூட்டக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையிலான உறுப்பினர்கள் சமர்ப்பித்தனர்.

இதற்கு  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

வஃபு வாரிய மசோதாவில்  நாடாளுமன்ற கூட்டுக்குழுவால் திருத்தப்பட்ட மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுத்  தலைவர் ஜெகதாம்பிகா பால் தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.