சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 4 நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், 4,81,698 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) மே மாதம் நடைபெற் உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, திருத்தங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 16/11/2020) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, 01-01-2021 அன்று 18வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.
“வாக்காளர் பட்டியலில் பெயர்கள், விலாசம் மற்றும் விவரங்கள் சேர்ப்பது / நீக்குவது / மாற்றுவது ஆகியவற்றிற்கான படிவங்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் கிடைக்கும். படிவங்களில் நிரப்பப்பட்டவைகளை அங்கு சமர்ப்பிக்கும் வகையில், நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (4 நாட்கள்) நியமிக்கப்பட்ட இடங்களில் (பொதுவாக வாக்குச் சாவடிகள்) தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த 4 நாள் சிறப்பு முகாமில் 4 லட்சத்து 81ஆயிரத்து 698 பேர் விண்ணப்பித்து உள்ளனர். பெயர்கள் நீக்கம் செய்ய 1லட்சத்து 13ஆயிரத்து 930 பேரும், திருத்தம் செய்ய 72ஆயிரத்து 292 பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய முறையில் பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.