விழுப்புரம்: இன்று நடைபெறும் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியலில் அடியெடுத்து வைக்கும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், அடுத்து கட்சியின் முதல் மாநாடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. அதற்கு காவல்துறை முறையான அனுமதி கொடுக்காத நிலையில், அக்டோபர் 27ந்தேதிக்கு மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்று இன்று தவெகவின் முதல் மாநாடு பிரமாண்டமாக நடைபெற  உள்ளது. இதற்கு காவல்துறை உள்பட அனைத்து அனுமதிகளும் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில்  இன்று  (அக்டோபர் 27) நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு அரசியல் கட்சிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விக்கிரவாண்டி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி,  மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வரக்கூடாது. செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது, வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை. தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது என  பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,   திரை பிரபலங்கள் என பலதரப்பினரும்  கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாநாட்டு திடலில் கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி,  மாநாட்டு திடலில் காவல் துறை அளிக்கும் பாதுகாப்புடன் 150-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் படை, துபாயில் இருந்து 1000 பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும்,  மாநாட்டு திடலை சுற்றி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்