உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பில் இதுவரை 4 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது, மேலும் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

கங்கோத்ரி தாம் செல்லும் வழியில் உள்ள முக்கிய இடமான தாராலியில் உள்ள கீர் கங்கா நதியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சுமார் 20 முதல் 25 ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை அடித்துச் சென்றுள்ளது.

ஹர்ஷில் உள்ள இந்திய ராணுவ முகாமில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குடியிருப்பாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் பலர் பாதுகாப்பான இடத்தைத் தேடி தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள மக்களை மீட்க இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐடிபிபி) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.