வாஷிங்டன்: அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த உஷா ஆகியோர் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்ம் வருகிறார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார். உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
சமீபத்தில் அமெரிக்க சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். அப்போது அவர்களை இந்தியாவுக்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்று அவர்கள் 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
அதன்படி, வரும் 21ம் தேதி இந்தியா வரும் அவர்கள், 24ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்தின்போது ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் சிம்லா, ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அவர் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜே.டி.வான்ஸ்க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜே.டி.வான்ஸ் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்தாலும், அதிபர் டிரம்பின் வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 22ம் தேதி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.