சென்னை: டிட்வா புயலால் அதிக கனமழை, அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று மாலை முதல் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் டிட்வா புயலால் கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள `டிட்வா’ புயல், தமிழகத்தை நோக்கி மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் இதன் வேகம் 7 கி.மீ குறைந்துள்ளது. தற்போது சென்னையிலிருந்து 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், வரும் 30ம் தேதி அதிகாலை வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயல் பாதிப்பு தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், ‘டிட்வா’ புயல் இலங்கையில் நிலத்தைத் தொட்டு பலவீனமடைந்த நிலையில் தற்போது திறந்த கடற்குச் செல்கிறது
அதாவது, ‘டிட்வா’ புயல் இலங்கையின் மலைப்பகுதிகளுக்குள் சென்று மிகவும் பலவீனமடைந்துள்ளது.இந்த புயலால் இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இன்றுதான் இலங்கையில் கடும் மழையின் கடைசி நாள் ஆகும் என தெரிவித்துள்ளார். இந்த பலவீனமடைந்த புயல் மீண்டும் திறந்த கடலுக்குச் சென்றவுடன் இது மீண்டும் வலுபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளதுடன்,
இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி கடற்கரை, ராமநாதபுரம் கடற்கரை பகுதிகள், நாகை, தஞ்சாவூர் தெற்குப் பகுதிகள், புதுக்கோட்டை கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் அதிக கனமழை, அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்பு இல்லை எனவும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.