டெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில்  மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக  மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது.  அங்கு ஏற்கனவே இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.  இதை  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 31 அக்டோபர் 2019 அன்று லடாக் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக நிறுவப்பட்டது. அதற்கு முன், இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. லடாக் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் இரண்டாவது குறைந்த மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசமாக மாறியது. அங்கு இரண்டு மாவட்டங்கள் மட்டுமே ஏற்கனவே இருந்து வந்த நிலையில், தற்போது மக்கள் தொகைக்கு ஏற்ப மேலும் 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய 5 புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக யூனியன் பிரதேசங்கள் மத்திய உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், லடாக் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் தங்களது பகுதிகளில் மேலும் பல மாவட்டங்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் மக்களை எளிதில் அடையச்செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  வளர்ந்த, வளமான லடாக்கை உருவாக்குவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை பின்பற்றும் வகையில், யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று 5 புதிய மாவட்டங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகிய இந்த புதிய 5 புதிய மாவட்டங்கள் மக்களுக்கான நன்மைகள் செய்யும், இனி ஒவ்வொரு திட்டமும் மக்கள் வீட்டின் வாசலிலேயே வந்து சேரும். லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.