டெல்லி: ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை  ரூ.50,655 கோடி மதிப்பில் 936 கிலோமீட்டர் தொலைவுக்கு  8 அதிவேக  நெடுஞ்சாலை  திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அ தன்படி, ரூ.50,655 கோடி முதலீட்டில் 936 கிமீ அளவுக்கு 8 தேசிய வேக சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

9 மாநிலங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டங்களால், பயண நேரம் பாதியாக குறையும் என்றும் 4.4 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தேசிய நெடுஞ்சாலை தொடர்பான 8 திட்டங்களுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய தாக்கம் செலுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாசிக் பாடா – கேட் இடையே எட்டு வழிச் சாலையும், ஆக்ரா -குவாலியர் இடையே 88 கிமீ, தரத்-தீசா-மெஹ்சானா – அகமதாபாத் இடையே 214 கிமீ தூரத்துக்கு ஆறு வழிச் சாலைகளும், காரக்பூர்-மோர்கிராம் இடையே 231 கிமீ, அயோத்தியில் 68 கிமீ, ராய்ப்பூர் – ராஞ்சி காரிடோவின் அதல்கான் – கும்லா இடையே 137 கிமீ தூரத்துக்கு நான்கு வழிச் சாலைகளும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.