சென்னை: மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே வரைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு பின்பற்றக்கூடாது என்று  சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறனார்.

தமிழக சட்டப்பேரவையில்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய  அமைச்சர் தங்கம் தென்னரசு,  மத்திய அரசின் நியாமற்ற செயலால் தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ.12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. நிதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அநீதியை மத்திய அரசு செய்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மத்திய அரசு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் 50%வது நிதி பங்களிப்பை வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரிகள் தமிழ்நாட்டிற்கான உரிய பங்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில்,  பிரதமர் சூரிய ஒளி திட்டத்தின்கீழ்  11,722 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,472 சூரிய மின் நிலையங்கள் நிறுவப்படும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பணிகள் முடிவுறும் பட்சத்தில் இணைப்புகள் கொடுக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது. நம்முடைய மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத அதேவேளையில், நாக்பூர் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கும், கொச்சி மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு குருகிராம், புனே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கான ஒப்புதல் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையிலும்கூட, இந்திட்டத்துக்கான முழு செலவினத்தையும் தமிழகத்தின் சொந்த மாநில நிதியிலிருந்து முதல்வர் மேற்கொண்டுள்ளார்.

இதனால் மிகக் கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டிருக்கிறது. இந்தவொரு நியாயமற்ற செயலால், மாநில அரசுக்கு இந்த வருடம் மட்டும் ஏறத்தாழ ரூ.12,000 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல், அதற்குப் பிறகு வந்த தென்மாவட்ட வெள்ளம், அதற்கெல்லாம் நிவாரணத் தொகையாக மத்திய அரசிடம் ரூ.37,906 கோடி கேட்டிருக்கிறோம். ஆனால், ரூ.276 கோடி தான் நமக்கு கிடைத்ததுள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி ரூ.20,000 கோடி வரவேண்டியிருக்கிறது.

மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே வரைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அரசு பின்பற்றக்கூடாது. அதேபோல் நீங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளின் அடிப்படையில் அதனை செய்ய வேண்டும்.

மேலும், கட்டுமான வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது.

20,830 மெகாவாட் என்னும் மின் தேவையின் உச்சத்தை நாம் கடந்த ஆண்டில் எட்டி உள்ளோம். தமிழ்நாட்டில் மே மாதம் மட்டும் 20,000 மெகாவாட் அளவில் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 4,600 மெகாவாட் மின் தேவை சென்னையில் மே மாதத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த அண்டு 800 மெகாவாட் வட சென்னை அணுமின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.