சென்னை: சென்னையின் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம், செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதை அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனப்டி,  தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ₹757 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

தற்போதைய ரயில் பாதையின் பயன்பாடு சுமார் 87 சதவீதமாக உள்ளது. நான்காவது பாதை அமைக்கப்படாவிட்டால் இது 136 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் காரணமாக ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்று வர முடியாத நிலை உருவாகலாம் என்பதால் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான திட்ட ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்தியஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்க மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் செல்லும் பிரதான பாதையான தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில், நெரிசலைக் குறைக்கும் விதமாக நான்காவது புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

தாம்பரம் டூ செங்கல்பட்டு இடையேயான  30.02 கி.மீ. தூரமுள்ள இந்த நான்காவது ரயில் பாதை திட்டத்திற்கு ரூ. 757.18 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதிதாக அமையவுள்ள இந்த வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க வகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், இருப்பது மூன்று ரயில் பாதைகள் மட்டுமே. இதனால், இந்த வழித்தடத்தின் பயன்பாடு 87 சதவீதமாக உள்ளது.

இந்தபுதிய ரயில் பாதை பயன்பாட்டுக்கு வரும்போது,   தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் அதிகரித்து வரும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு பெரும் உதவிகரமாக இரக்கும்,  மேலும், புதிதாக அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் ஆகியவற்றுக்குச் செல்லும் பயணிகளுக்கும் இது பேருதவியாக இருக்கும். மேலும், இந்த வழித்தடம் காரணமாக,  செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில் சேவையை நீட்டிக்கவும், பயணிகளின் நெரிசலைக் குறைக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.

இதுமட்டுமின்றி,   பொத்தேரி பகுதியில் சரக்கு ரயில் போக்குவரத்து கையாளப்படும் என்பதால், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 157 கோடி அளவில் கூடுதல் வருவாய் ஈட்டவும் வாய்ப்புள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரூ.713.4 கோடி செலவில் தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது  ரயில் பாதைக்கான ஆய்வு நிறைவு…