டெல்லி:  மராத்தி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 3ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் ரயில்வே போனஸ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு  ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி,  மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.

‘கடந்த அக்டோபர் 12, 2004 அன்று ‘செம்மொழிகள்’ என புதிய வகை மொழிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 2004 ஆம் ஆண்டே முதலில் தமிழை செம்மொழியாக அறிவித்தது. அதன்பின் சம்ஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா (2014) மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்நிலையில், மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கோரி 2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசிடமிருந்து ஒரு முன்மொழிவு பெறப்பட்டது. அது மொழியியல் நிபுணர்கள் குழுவுக்கு (எல்இசி – Linguistic Experts Committee ) அனுப்பப்பட்டது. நீண்ட காலமாகவே அது பரிசீலனையில் இருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தேர்தல் களத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்துவந்த நிலையில் மத்திய அரசு மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது.

இத்துடன், பிஹார், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற் கான பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன்படி, மொழியியல் வல்லுநர்கள் குழு (LEC) ஜூலை 25, 2024 அன்று நடந்த கூட்டத்தில் கோரிக்கைகளை பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி மற்றும் வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

செம்மொழியாக மொழிகளைச் சேர்ப்பது வேலை வாய்ப்புகளை உருவாக்கும், குறிப்பாக கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும், இந்த மொழிகளின் பண்டைய நூல்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் சார்ந்தும், மொழிபெயர்ப்பு, வெளியீடு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.