சென்னை

திமுக அரசு மத்திய பாஜக அரசின் மிரட்டலுக்கு அஞ்சாது என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்

நேற்று தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்தது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஒமந்தூரர் மருத்துவமனைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மேலும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலி, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நலமாக இருக்கிறார். பா.ஜ.கவின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.  திமுக அரசு இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திக்கும்” என்று கூறி உள்ளார்.