வாஷிங்டன்

மெரிக்க அதிபர் ஜோ பைடன் போதை மருந்து பயன்படுத்துவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சக்கட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும்.  சில தினங்களுக்கு முன்பு அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளைக் கண்டுபிடித்தனர்.

இந்த மர்மப் பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு அது கோகெய்ன் போதை மருந்து என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வெள்ளை மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட கோகெய்ன் போதை மருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் ஆகியோரின் பயன்பாட்டிற்குத்தான்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த கோகெய்ன் போதை மருந்து கண்டுபிடிக்கப்பட்ட போது பைடன் வார இறுதி விடுமுறைக்காக கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தங்குமிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.