சென்னை: போக்குவரத்து துறை வேலை மோசடி வழக்கு  தொடர்பான வழக்கின் விசாரணைக்கு  இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி எம்பி, எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2011 – 2015ஆம் ஆண்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில்,   சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, முன்னதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத பணப்பரி மாற்ற வழக்கில் கடந்தாண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து வழக்கு  எம்.பி.,எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நிதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.   இந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற  நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று  செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு வந்தது முன்னதாக,   ஏற்கனவே  வழக்கில் 2,222க்கும் மேற்பட்டவர்கள்  மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக குற்றம் சாட்டப்பட்ட  100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்றைய வழக்கின் விசாரணைக்கு  அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட குற்றம் சாட்டபவர்கள் ஆஜராகி இருந்தனர்.  ஆனால், பலர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில்,   அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மேலும் 50 பேருக்கும்சேர்த்து  சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் வழக்கின் விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.