ராமேஸ்வரம்

ன்று 90 கிமீ வேகத்தில் புதிய பாம்பன் பாலத்தில் ரயில் ஓட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது..

ரூ.545 கோடியில் ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலம் கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.

பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ள இந்த புதிய ரயில் பாலத்தை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து நேற்று முன் தினம் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர், மண்டபம் வந்தார். பிறகு அவர் பாம்பன் வந்து டிராலியில் அமர்ந்து புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டார்.

அவரது ஆய்வுக்காக தூக்குப்பாலமானது 17 மீட்டர் உயரத்திற்கு முழுவதுமாக திறக்கப்பட்டுபின்னர் மீண்டும் மூடப்பட்டது.  இன்று புதிய பாம்பன் பாலத்தில் இன்று ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை புதிய பாம்பன் பாலத்தில் நடைபெற்றது.

சோதனையின் போது 90 கிலோமீட்டர் வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரயில் கடந்து சென்றது. பாம்பன் புதிய ரயில் பாலம் இம்மாதத்திற்குள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.