தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியல் உள்ள  ஏரியில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிட்லப்பாக்கம் ஏரியில் குளித்த மாணவர்கள் லோகேஷ் (12), சஞ்சய் (12) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் மிதந்து கொண்டிருந்த 2 வட மாநில சிறுவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சியில் 15க்கும் மேற்பட்ட ஏரிகள் அமைந்துள்ளன. அதில் மிக முக்கியமான ஏரியாகவும், மிகப்பெரிய பரப்பளவு கொண்ட ஏரியாவும் சிட்லப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக 86 ஏக்கராக இருந்த ஏரி காலப்போக்கில் குடியிருப்பு பெருக்கத்தாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் தற்போது 46 ஏக்கர் அளவிற்கு சுருங்கியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த ஏரியின் மூலமாக சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. ஆனால், அதன் பிறகு ஏரியைச் சுற்றிலும் தொடர்ந்து குடியிருப்புகள் அதிகரித்து வந்ததால் விவசாயம் கைவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக சிட்லப்பாக்கம் ஏரியில் கலந்துள்ளது. இதனால், ஏரி முற்றிலுமாக மாசடைந்துள்ளது.

மேலும் ஏரியைச்சுற்றி குப்பைகளை கொட்டி குப்பை மேடுகளாக மாற்றியுள்ளனர். மேலும், ஏரி நீரில், கழுவு நீர் கலந்ததால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக அப்பகுகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், நீர்நிலை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்கள் தொடர்ந்து சிட்லப்பாக்கம் ஏரியை மீட்க பல்வேறு பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுப்பணித்துறைக்கு அளித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சிட்லப்பாக்கம் ஏரியை மறுசீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி, படிப்படியாக சிட்லப்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டு, மாசடைந்த நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டது. மேலும், ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகளை முற்றிலுமாக அகற்றி, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தினர். இதையடுத்து இந்த ஏரி பகுதியும் சுற்றுதலமாக மாறி உள்ளது.

இந்த நிலையில், அந்த ஏரிக்குள் இரண்டு சிறுவர்களின்உடல்கள் மிதப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவல்களை தொடர்ந்து, அவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர்,  நீச்சல் தெரியாமல் தண்ணீர் மூழ்கி இறந்தனரான  என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.