சென்னை: மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை திருத்தம் செய்யாதவர்கள் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளிள்ல சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலமே நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.
அதன்படி, நாடு முழுவதும் உளள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2025ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 7 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. அதன்படி, மார்ச் 7 ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிவடைந்தது
. இதைத்தொடர்ந்து, தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்கான அவகாசமும் இன்றுடன் முடிவடைகிறது. மேலும் வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பவர்கள், 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என என்டிஏ தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். பின்னர் நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என என்டிஏ அறிவித்துள்ளது.