டெல்லி

கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை மீது தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரி நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஃர்ஹ் கொடூரக் கொலையை கண்டித்து டாக்டர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

காவல்துறையினர் இந்த பலாத்காரக் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடப்பட்டு சி.பி.ஐ. சிறப்பு விசாரணை குழுவினர் கொல்கத்தாவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அந்த மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது அந்த போராட்டம் வன்முைறயாக மாறியது. ஒரு சிலர் மருத்துவமனைக்குள் புகுந்து அந்த மருத்துவமனையை முழுமையாக சூறையாடியதில் மருத்துவர்களின் இருக்கைகள், கருவிகள், கண்ணாடி ஜன்னல்கள், படுக்கைகள் அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன.

காவல்துரையினர் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைத்தனர். இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியும் , மருத்துவ மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று  நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. மருத்துவர்கள் இன்று காலை 6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர் .எனவே வழக்கமான புறநோயாளிகள் பிரிவு மூடப்படும். விருப்பு அறுவை சிகிச்சை பணிகள் நடைபெறாது. ஆயினும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல இயங்கும்.