சென்னை:   ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை படைத்துள்ளதாக  தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  பிப்ரவரி 4ந்தேதி அன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் 10,000 முகாம்கள் நிறைவையொட்டி, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின்பு,  கடந்த ஐந்து ஆண்டுகளில்,  அனைத்து துறைகளிலும் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்

பொதுமக்கள் அதிகம் நாடும் சேவைகளை அவர்கள் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கிடும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 15.7.2025 அன்று தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில், முறையே 3,768 முகாம்கள், மற்றும் 6,232 முகாம்கள் என  10,000 முகாம்கள், நவம்பர் 2025 வரை நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 முக்கியமான சேவைகளும், கிராமப்புறப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சார்ந்த 46 முக்கியமான சேவைகளும் இந்த முகாம்களில் வழங்கப்பட்டன.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில், சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக் கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வும், பிற இனங்களில் 45 நாட்களில் தீர்வும் காணப்பட்டன.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில், மொத்தம் 38.50 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு, இதுவரை 38.44 இலட்சம் மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் ஏற்கப்பட்ட மனுக்கள் 28.87 இலட்சம் (75%) ஆகும்.  விதிகளுக்கு உட்படாததாலும், நிர்வாக காரணங்களாலும் ஏற்க இயலாத மனுக்கள் 9.58 இலட்சம் ஆகும்.

இம்முகாம்களில், பெருவாரியான மக்கள் சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம்,  பட்டா மாறுதல், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு, வருவாய்த் துறை வழங்கும் பல்வேறு சான்றிதழ்கள், குடும்ப அட்டையில் திருத்தம், சொத்து வரி பெயர் மாற்றம், மின்னிணைப்பு பெயர் மாற்றம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய பயன்கள் போன்ற சேவைகளைக்  கோரிய  மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய அனைவருக்கும் உரிய காலத்திற்குள் பயன்கள் வழங்கப்பட்டன.

இம்முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி   சுமார் 30 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வின் அடிப்படையில், தகுதியுடைய 16.90 இலட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கடந்த டிசம்பர் 2025 முதல்  வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]