சென்னை: குளிரூட்டப்பட்ட ஏசி பேருந்தில், ஏசி முறையாக வேலை செய்யாததால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்ட ஈடுவழக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நஷ்ட ஈட்டை, பேருந்தை முறையாக பராமரிக்காத போக்குவரத்து துறை அதிகாரிகளின் சொந்தப் பணத்தில் இருந்து வழங்க நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி ராஜேஷ் என்ற பயணி மதுரையில் இருந்து நெல்லைக்கு, அரசு போக்குவரத்து கழக ஏசி (குளிர் சாதன பேருந்து) பேருந்தில் திருநெல்வேலிக்கு பயணமானார். இவருக்கு ஏசி பேருந்துக்கான கட்டணம் ரூ.190 வசூலிக்கப்பட்டது. ஆனால், பேருந்து புறப்பட்ட நிலையில், அதில், AC வேலை செய்யாமல் இருந்தது. இதுகுறித்து பேருந்து பயணிகள் பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் கேட்ட நிலையில், அவர்கள் சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே சலசலப்பு எழுந்துள்ளது. மேலும், ஏசி பேருந்துக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு, ஏசி இயங்காமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக நெல்லையில், போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் பயணிகள் தரப்பில், புகார் அளித்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பயணிகளில் ஒருவரான ராஜேஷ், இதுகுறித்து நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவடைந்து நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி அதிரடி தீர்ப்பை வாங்கி உள்ளார்.
தீர்ப்பில், பயணிக்கு நஷ்ட ஈடாக ரூ.25,000, வழக்குச் செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள் போக்குவரத்து துறை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த நஷ்ட ஈட்டுக்கான பணத்தை, நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தங்களது சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு போக்குவரத்து கழக அதிகாரிகளிடையே பரபரப்பை எற்படுத்தி உள்ளது.