திருநெல்வேலி மாவட்டம், பண்பொழி , திருமலைமுத்துக்குமாரசுவாமி ஆலயம்

இங்குள்ள மூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள் பாலிக்கிறாள். விநாயகர் சன்னதிக்கு 16 படிக்கட்டுகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள்.
:இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை அகழ்ந்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது.
அந்த உடைசல் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கிராமப்புறத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக “மூக்கன்’ என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள்.
நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படும்.
இது திருமலை முருகனின் பெயர் தான். மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை.
ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரை கூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காண முடியும். இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக உள்ளது.
இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன.
கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும்.
அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது “முருகா’ எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம்.
இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார்.
மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.
பந்தளமன்னர் எழுப்பிய கோயில்:
பந்தளமன்னர் எழுப்பிய கோயில் எது என யாரைக் கேட்டாலும், “”இது தெரியாதா! சபரிமலை ஐயப்பன் கோயில்,” என்பார்கள். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர்.
இக்கோயில் உருவாக காரணமாக இருந்த பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி பந்தளமன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளார்.
விசாக நட்சத்திர கோயில்:
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன.
செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள்.
“வி’ என்றால் “மேலான’ என்றும், “சாகம்’ என்றால் “ஜோதி’ என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது.
இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
அன்னதானம்:
ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் சபை சார்பில் இங்கு அன்னதானம் காலை 6மணி முதல் இரவு வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது.
பிரார்த்தனை:
வேண்டியதையெல்லாம் கொடுக்கும் அருள்கடவுளாக உள்ளார்.
நேர்த்திக்கடன்:
கோயில் பிரகாரங்களில் தீபம் ஏற்றுகின்றனர்
அமைவிடம்:
மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.
[youtube-feed feed=1]